திங்கள், 30 நவம்பர், 2015

அலட்சியம்


என்ன அவசரம்...?
படிக்கலாம்,
பரீட்சைக்கு இன்னும்
நாள் இருக்கே!


முந்தைய நாள் வரை
தொடரும் அலட்சியம்!


புத்தகமும் கையுமாய்
முடிந்த இரவோடும்
எரிகிற விழியோடும்
தேர்வறை வாசம்!


எல்லாம் மறந்தது போல்
இருக்கும்.

தேர்வறை சீட்டை
ஞாபகப் படுத்திய
அம்மா மாதிரி
யாரேனும் உடன் தேவை
தேர்வறையிலும்!

நினைவில் நின்றதும்
இட்டுக் கட்டியதுமாய்
முடித்துக் கட்டி
வெளியேறுகையில்
உடன் தொடரும் -
நமக்கு நாமே
சமாதானம்!

"அடுத்த முறை
இதே தவறு
நிகழக்கூடாது"

இப்போதும்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது -
எல்லா நிலைகளிலும்,
எல்லா இடங்களிலும்!!!

புதன், 25 நவம்பர், 2015

அளவுகோல்

பள்ளிநாட்கள்
முதல் அறிமுகம் !

கணக்கு வகுப்புகளில்
மட்டுமல்லாது
எல்லா நிலைகளிலும்
உபயோகப்படுத்தப் பட்டன

சம்பந்தமே இல்லாத
வேறு வேறு அளவுகோலோடு
நட்பு வட்டாரமும்,
பெற்ற வட்டாரமும்.

தேருமோ, தேராதோ??
வினாக்களுடனே
சுற்று வட்டாரமும்!

எல்லா அளவுகோல்களையும்
கடந்து வந்த நானும்
கையோடு வைத்திருந்தேன் -
என்னால் முடிந்த அளவுகோல்!

பற்பல சோதனைக்கப்பாலும்
முடிவுக்கே  வர முடியவில்லை -
சரியான அளவுகோல் தானா இது?

சரியென குறிக்கிற
புள்ளிகளில் இருந்து
சிறிதோ பெரிதோ
நகர்ந்தே முடிகிறது -
கோணங்கள் மாற்றி
பார்க்கிற ஒவ்வொரு
பார்வையுலும்!

முயற்சிகள் இன்னும்
தொடர்ந்தாலும் ...

தூர எறிந்துவிட்டு
நகர்கிற நிமிடங்களில் தான்
உணர முடிகிறது ...
வாழ்வின் மகத்துவம்!