புதன், 29 ஆகஸ்ட், 2018

நம்பிக்கை வளர்ப்பவர்கள்


நிறைந்து வழியும்
கோவிலெங்கும்
வேண்டுதல்கள்.

முனு முனுப்பது
மந்திரமாகவோ
கோரிக்கையாகவோ
இருக்க கூடும்.

சிலரின்
கண்மூடிய தரிசனங்களில்
கண்ணீரும்.

நன்றி சொல்லும்
விழிகளில் மிளிரும்
வண்ணங்கள்
கடந்து போவோருக்கும்
பற்றிக்கொள்கின்றன
நம்பிக்கை வளர்ப்பவர்கள்
கடந்து போகிற பிரகாரங்களில்!

வெறும் வேண்டுதலோடு
நின்று விடாதவர்கள்
வந்து போகிற
நொடிகளில் தான்
சக்தி உருவெறும்
பலருக்கான
நம்பிக்கை ஸ்தலங்கள்!

நம்பிக்கை வளர்ப்பவர்களை
மேலும் வளர்ப்பதே
முறையன்றோ!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சுதந்திர கதைகள்

3ம் வகுப்பு
ஸ்கூலில் கூட்டி போன
காந்தி படம் தவிர
ஆரஞ்சு மிட்டாயும்,
"பட்டொளி வீசி பறக்குது பாரீர்"
பாட்டுமே
நினைவில் வந்து போகும்!

சமீப காலங்களில் 
சாலமன் பாப்பையாவும்
உடன் சேர்ந்திருக்கிறார்.

மனதில் எதோ
பதற்றம் பற்றிக் கொள்ள
சம்பந்தமே இல்லாமல்
திடீரென
வெள்ளையனை பற்றியும்,
வெகுண்டெழுந்த
வல்லமை பற்றியும்
இரவு நேர கதைகளில்
கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்!

விழி விரிய கேட்கும்
பிள்ளைகளுக்கு
பின் நாள் நினைவுகளில்
நிலைக்குமா?
சுதந்திர கதைகள்!