திங்கள், 27 ஜூலை, 2020

பார்வை 1
------------

நட்டு வைச்ச விதை
வள(ர்)ந்து வந்த
நாள் இன்னும் மறக்க(லை)ல

எட்டு வைச்சு பாக்காம
எட்ட நின்னு பாத்திருந்தேன்

தெரியாம கால் பாட்டு
எதுனாச்சும் ஆச்சுதுன்னா!?
நினைக்கவே பதறுது.
பாத்தி கட்டி நனைச்சிருந்தேன்.

எப்ப வரும் துளிர்னு - கண்
கொட்ட கொட்ட காத்திருந்தேன்.
எட்டிப் பாத்த சேதி சொல்லி
எட்டு காதை பேத்துருக்கேன்.

மண் மாத்தி, உரம் போட்டு
களையெல்லாம் எடுத்து விட்டு
கலையாம பாத்துக்கிட்டேன்.
மழை வந்து காத்தடிச்சா
ஒடியாம வேண்டிகிட்டேன்.

செடியாச்சு, மரமாச்சு
இலைக்கு கீழே நிழலாச்சு
காக்கா குருவிக்கும்
வீடொன்னு உருவாச்சு.

மொட்டு விட்ட நாள் கண்ணு
சொட்டு சொட்டா சொட்டு விட
கண்ணீரு வடிச்சிருக்கேன்.
மண்ணோடா மவுசுன்னு
மலைச்சுட்டே தூங்கி(யி)ருக்கேன்

பூவிட்டு காய் விட்டு
கொத்து கொத்தா காச்சிருக்க
கண்ணெல்லாம் செவப்பாச்சு
மண்டை மூளை வெடிச்சிருச்சு

பாவி மரம்.

வேலி தாண்டிருச்சே!
வேண்டாத வீட்டு மேல
நிழலோட பூவும்  விட்டு
எட்டுற உயரத்துல
எம்புட்டு வளந்திருக்கு
எதுக்கு இப்படி நீண்டிருக்கு?

வைச்சது நானு
வள(ர்)த்ததும் நானு
காய்க்கிற கனத்தால
வளைஞ்சு போயிருச்சே.
விளைஞ்ச காய் பறிக்க
எட்டுற  தூரத்துல
பிறர் வலைச்ச கதையாச்சே.

மர மண்டைனு
வாத்தியார் குட்டினப்பா
வலிச்சதில்லை
வலிக்குதிப்ப நீ
கொழிக்கிற நேரத்துல




பார்வை 2
------------
ஊரெல்லாம் ஒடுங்கிருக்கு
உறவெல்லாம் ஒதுங்கியிருக்கு
பெருக்கிட்ட வாசலிலே
கால்தடம் பதிய(வி)ல்(லை)ல
என்னதான் நடக்குதுன்னு
எவனுக்கும் புரிபடல

முறுக்குன மீசையெல்லாம்  
பாத்திரம் கழுவுறானாம்
கழுவுனா பாத்திரத்தை
மறுபடி கழுவுறானாம்

படிச்சவன், சேத்தவன்,
விவரம் தெரிஞ்சவன்
எல்லாரும் மக்கானான்.
பூட்டுன வீட்டுக்குள்ள
பேசி பேசி மாஞ்சு போறான்.

கவருமெண்டு கதையெல்லாம்
நம்பி ஒண்டிக்கிட்டேன்
நல்லது நடக்குமுன்னு
நம்பி தான் காத்திருக்கேன்

எல்லாம் வீணாச்சு
வாய்க்கும் வயித்துக்கும்
என்ன சொல்லி நாள் நகத்த?
வாய்க்கரிசி போட கூட
வழியில்லா பொழைப்பாச்சே

பக்கத்து வீட்டு மகராசன்
முகம் கொடுத்து நாளாச்சு.
எவனெவனோ தலைவன்னு
எப்பவோ நடந்தந்த
வெட்டி பேச்சு நீண்டு
பெரும் பகையா ஆயிடுச்சு
வேண்டாத ஆளாச்சு.

அவன் வீட்டு மரத்து இலை
என் வீடு குப்பையாச்சு
காக்கா குருவின்னு
கக்கா போயி போயி
பக்கவாடு பாழாச்சு

வெட்டி தூக்கி போட
அரிவாளு தூக்குனாலும்
மனசு ஒத்துவல்(லை)ல

மாரிமுத்து வாத்தியாரு
வளக்க பழக்குன கையிது
ஒரு போதும் தவறாது.
அரிவாளு தூக்கி போட்டு
அறிவோட அடங்கிட்டேன்.







சிறகிருக்க உணருகிறேன்
சிரம் மேலே உயர்த்திட்டே
விழிமூடி உலவுகிறேன்

உனதருகே நடை போட
உயிர் பூவும் விரிகிறதே

கனவெதிலும் வந்ததில்லை
ஒரு போதும் நினைத்ததில்லை
முதன்முதலாய் கனவதுவே 
முழு உருவம் கொண்டதடி

தினம் தினமாய் பெருகுதடி
விழி முழுதும் ஒளி நிறைய
உன் பிம்பம் நிறையுதடி
மனம் நிறைய, உருப்பெருக்கி
நாளமெல்லாம்  நகருமுந்தன்
புன் முறுவல் பெருகிடவே
எடை கூடி போகுதடி
என் வாழ்வில் வசந்தங்கள்




புதன், 8 ஜூலை, 2020

காலை வணக்கம்

நாலரை பில்லியன்
வருட கணக்கிற்கு முன்
காலை கணக்கில் உண்டா?

சுணக்கம்
விடவியலாது
படுக்கையில் மறுபடி
விழுகிற வாய்ப்பெனும்
வாய்த்ததுண்டா யாருக்கேனும்?

எப்படி இருந்தததென
எவரும் அறிந்திராத
அதே பூமி
இன்றும் புதிதாய் விடிந்திருக்கிறது

உணரப் படாதிருந்த
ஏதோ ஒன்று
விடை பட வேண்டிய
விழைப்போடு!

விழிப்புடன் தொடங்கலாம்
ஒவ்வொரு காலையும்!


செவ்வாய், 7 ஜூலை, 2020

பேரலை

ஓயாத வார்த்தைகள் 
உன் வசம்
ஒரு போதும் 
திகட்டாது இனித்திடும்

கேள்வி ஒன்று விடுத்த படி
பதிலும் நீயே அடுக்குவாய்
தலையாட்டும் பொம்மையாவேன்
காலை மாலை இரவுமாவாய்!

நிறுத்தும் நேர இடைவெளியில்
அரங்கேறும் புன்னகைக்கே
பிறந்து நானும் வளர்ந்தேனோ?!
பறந்து வானம் மிதந்தேனே!!

ஓயாத காதலே  உன் வசம்
ஒரு போதும் குறையாதே
பெருகிடும்

கிறுக்கல்கள் கவிதையென்றாய்
விசிறிய கசக்கல்கள்
சேர்த்து வைத்தாய்
நொடி நொடியாய் இனித்ததடி
நினைக்க மேலும் சுவைக்குதடி

ஓயாத பேரலை என் வசம்
ஒரு போதும் ஓயாது  மோதிடும்!!




திங்கள், 6 ஜூலை, 2020

நீர் குமிழ்

இலை வழியாய்
நிழல் வழியும்
மரத்தடியே பாட சாலை

செவி நிறையும்  நேரமது. 
கண்கள்  கொஞ்சம் 
திசை மாற
குறி பார்த்து பறந்து வரும் 
விடுத்திட்ட 
சுண்ணாம்பு பாணம்

கொல்லென சிரித்திட்ட
நட்பின்  பால்
சுள்ளென கோபம் வரும்

நடந்ததை பகிர்ந்திட 
சொல்லி சொல்லி சிரிக்கிறாள் 
எனைப் பெற்ற 
என் பிள்ளை!

இன்னுமுண்டு 
பகிர்ந்த கதை 
பல நூறு!

சுறுசுறு எறும்புகள் 
துரு துரு கடித்து 
சிவந்திட்ட நினைவுகள்

மிதிபட்ட வேப்பம் பழம்,
உதை பட்ட சிறு கற்கள்,
தினந்தோறும் இருமுறை 
திகட்டாத தேனமுதாம் -
பள்ளி மணியோசை!

ஒன்றன் பின் ஒன்றாய் 
சிறு சிறு 
நீர் குமிழ்கள் 
மேலெழும்ப
அடியிருக்கும் பெட்டகம் தேடி
மூழ்கித் திளைக்கிறது
நாட்கள்

நண்பன் பகர்ந்திட்ட 
பள்ளி நாள் புகைப்படம்
பார்த்து பார்த்து!