திங்கள், 12 மார்ச், 2018

தெறித்தோடும் புரவிகள்...

எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை

இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.

அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்

பொய்த்தாள்

ஒரு கைல பேப்பர், ஒரு டீ (இல்லை காபி). இது பெரிய பாரம்பரியம். உலகத்துல எந்த பக்கம் போனாலும் இந்த ஸ்டைல் மட்டும் ஒரே மாதிரி தான்.

ஆனா இன்னைக்கு எப்பவும் போல இல்லை. நானும் எல்லா பேப்பரையும் புரட்டி பாத்துட்டேன். சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி தான். பிசிரு தட்டாம ஒரே மாதிரி எழுதி இருக்காங்க. 

எனக்கு நல்லா தெரியும். இது உண்மை இல்லை. வீட்டை விட்டு வெளிய வந்து  கத்தனும் போல இருந்தது. 

எவ்ளோ நேர்மையான ஆளு? அவரை போயி. சே!

இந்த நியூஸ் படிச்சிட்டு எவனெவன் என்ன பாடு படுத்துறானோ அந்த நல்ல மனுசனை? 

அப்ப இதுக்கு முன்னாடி நான் படிச்சு பகிர்ந்துகிட்ட எல்லா செய்தியும் இதே மாதிரி பெரிய புரட்டு தானா? 

சுவைக்காத டீ. பார்க்க சகிக்காத செய்தித்தாளோடு இப்படியா விடிய வேண்டும் இன்னைக்கு பொழுது?

நாளைக்கு வரலாறு பரிட்சைக்கு படிச்சுக்கிட்டிருக்கிற பையனின் தலை கோதி நகர்ந்தேன். 

இதே மாதிரி எத்தனை பொய் விதைக்கப்பட்டிருக்கிறதோ இந்த வரலாற்று புத்தகத்தில்!

ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுங்கதை

ஆங்காங்கே தீப்பட்ட மாதிரி  எரிச்சல். ரொம்ப கேர்லெஸ்ஸா   இருந்துட்டீங்கனு டாக்டர் சொன்னப்ப தலை சுத்திருச்சு. என்னன்னவோ மாத்திரை, ரெண்டு தடவை ஆபரேஷன் வேற. எவ்ளோ தான் செலவு பண்றது?
ஆனா பணத்த வச்சு என்ன பண்ண? என் சொத்தே உடம்பு தானே? இப்ப வந்த அறிவு அப்ப எங்க போச்சு? லைட்டா தெரிஞ்சப்பவே சுதாரிச்சிருக்கணும். விட்டுட்டேன்.

வெள்ள வேட்டி பளபளப்பில் கடந்து போன மாண்புமிகு டேஷ்க்கு இங்கே என்ன வேலை? இவன் எதோ பெரிய அறிவாளி மாதிரி பின்னால ரெண்டு பெரிய டாக்டர், கூடவே மாமா கணேஷ் (தொழில் ரீதியா வந்த பெயர்), குவாட்டர் சரசு அப்புறம் எவன் எவனோ. என்னமா ஜொலிக்கிறானுக!
மனசு பூரா பழைய கதை. அட பாவிகளா, விட்டுட்டோமோ!

 உடம்பு ரணம் மீறி எங்கெங்கோ வலித்தது.