ஞாயிறு, 7 நவம்பர், 2021

ரொம்ப நல்லவன்டா நீ

வெள்ளையும் சொள்ளையுமா வந்து நின்னப்ப இவன் பெரிய அப்பா டக்கருனு தான் நினைச்சேன். வேலைக்காரனா தான் சேந்தான். 

கொஞ்ச நாள்லயே நான் தான் அவனுக்கு பாஸ்ங்கிறதையே  மறக்கடிச்சான். இது ஒரு டெக்னீக். 

'ஆளப்பனார் நான் உங்கள் அடிமை'ன்னு தான் ஆரம்பிப்பானுக. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமா நம்ம தான் இவனுககிட்ட அடிமையாயிருப்போம். 

இதுல இப்ப நிலைமை என்னனா சார்கிட்ட பேசும் போது இயற்கை உபாதையை கூட அடக்கி வைச்சுப்பேன்னா பாத்துக்கங்க. அடிமைக்கெல்லாம் அடிமைனு பேரு வைச்சா நல்லா இருக்காது, விட்டுறலாம். 

ஓகே, ஓகே. 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா. யாருக்குடா இவ்ளோ பில்ட்-அப் கொடுக்கறான்ங்'கிற  உங்க மைண்ட் வாய்ஸ் நல்லா கேக்குது. 

ஆனா அதுல பாருங்க ஒரு சின்ன சிக்கல். 

சார், நம்ம ரெண்டு பேருக்குமே பொதுவான ஆளு. 

அவனை எனக்கு அறிமுகப் படுத்துனது எங்க ஊருல ஒரு பெரிய கை. ஊர்ல இருந்து வந்திருந்த  மாமா கூட போயிருந்தப்ப  தான் சார் அறிமுகமானாரு. 

'ரொம்ப நல்லவன்'னு சொன்னாங்க.

ரொம்ப குண்டா, கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு இப்ப யோசிச்சு பாத்தா ரொம்ப கேவலமா தான்  இருந்தான். இன்னைக்கு  எல்லாரும் நம்பி இருக்காதே நம்ம கதா நாயகனோட தயவை தான்.

இன்னைக்கு நீங்க அவனை பாக்கணுமே. கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது. 

இந்த கதையோட முடிவுல அவனோட பழைய போட்டோவ கண்டிப்பா பகிர்ந்துக்கிறேன்.  

இப்ப போட்டோவையும் பாருங்க. ஆம்பள, பொம்பள, விடலை பசங்க, பொடிசுகனு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி. நம்ம ஆளு தான் இப்ப உலக அழகன்.  சூப்பர் ஸ்டார், காதல் மன்னன், கனவு கன்னி எல்லாம் சார் பக்கத்துல கூட நிக்க முடியாது. 

'சார் உலகமெல்லாம் சுத்திட்டு வந்தவரு' அப்படி இப்படினு பெரிய இண்ட்ரோவட தான் சாரோட அறிமுகம். 

நம்ம கிட்ட வேலை பாக்க போற பயலுக்கு என்ன ஒரு பில்ட்-அப்னு தோணுச்சு. 

இப்பவும் சொல்றேன். எப்படி பாத்தாலும் நம்ம ரேஞ்சுக்கு இவன் ஒரு ஆளே கிடையாது. ஆனா யாரும் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.

சீட்டு விளையாட வருவான். சீட்டுக்கட்டை களைச்சு சும்மா சரக் சரக்னு அவன் போடுற அழகிருக்கே. வேற லெவல். 

காலங்காத்தால ஆரம்பிச்சு, மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம், சில சமயம் ரொம்ப நேரம் வரைக்கும் தூங்காம சீட்டாட்டம்னு நேரம் ஓடுச்சு. 

அப்பல்லாம் காசு வைச்சு சீட்டு விளையாட சார் ஒத்துக்கவே  மாட்டாரு. 

அதெல்லாம் இப்ப பழைய கதை. இப்ப எல்லாம் நம்மாளு எல்லா ஏரியாலயும் கல்லா கட்டுறாரு.

வெறும் சீட்டுக் கட்டோட எங்க நட்பு நிக்கல.  ரேஸுக்கெல்லாம் கூட்டிட்டு போயி கெத்து காட்டினான். 

ரேஸ் விடறதுல நம்ம ஆளு தலக்கு எல்லாம் தல. காரெல்லாம் உருண்டு, இடிச்சு, தீப்பிடிச்சு. யப்பா சாமி.  இந்த உட்டாலங்கடில்லாம் சினிமால தாண்டா பாத்துருக்கேன். அதுவே நம்ம கண்ணு முன்னாடி நடந்தா!? சும்மா தெரிக்க விட்டுருவாப்ல.

பாத்திங்களா? வேலைக்கார நாய்க்கு நான் குடுக்குற பில்ட்-அப்ப. அப்படிதான் ஆகிப் போச்சு. 

சாருக்கு என்ன பிடிக்கும்? எப்படி சார் கிட்ட பேசுறது? அவருக்கு புரிஞ்சிக்கிற மாதிரி எப்படி சொல்றது. இதெல்லாம் நல்லா தெரியலைனா சாரு பக்கத்துல கூட நிக்க முடியாது. 

என்ன கேட்டாலும் கேவலமா ஒரு பதில் வரும். அப்படி ஒரு வேலைக்காரன். 

சார் யாரு, சாருக்கு என்ன தான் தெரியும்? சார் குலம் கோத்திரம் என்ன? இப்படி எல்லாம் விசாரிக்கறதே ஒரு பொழைப்பா திரிஞ்சேன். 

அப்புறம் அதை மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லி என் பங்குக்கு நானும் 'சார் ரொம்ப நல்லவரு. பாத்து பக்குவமா பேசுனீங்கனா எல்லா வேலையும் நல்லா வைச்சு செய்வாரு'னு பிரமோட் பண்றதே வேலைனு திரிய ஆரம்பிச்சேன். 

அப்ப தான் சார் ஒரு ஜெர்க் அடிச்சாரு. 

எனக்கு இன்னொரு முகம் மட்டும் இல்லை, நெறய முகம் இருக்குனு. 

சும்மா தெரிக்க விட்றதுனா தெரியுமா? அது தான் நடந்தது.

டபுள், ட்ரிபிள் ஆகுறது கேள்வி பட்டிருக்கேன். நம்ம ஆளு அடிச்ச அடில ஆயிரம், பத்தாயிரம் மடங்குனு ஜம்ப் அடிச்சான் பாருங்க. 

என்ன மாதிரி ஒர்க் அவுட்னு தான் தெரியலை. பர்ஸ் பெரிசாச்சு, உடம்பு சிறிசாச்சு. 

சில பேர் வெயிட் லாஸ் பண்றேனு நோயாளி மாதிரி வந்து நிப்பாங்க. அப்புறம் நாளாக நாளாக அதுவே பார்த்து பழகிடும். 

ஆனா நம்ம ஹீரோ கதையே வேற. சும்மா ஜம்முனு வந்து நிக்கிறான். 

சாரை நம்ம ப்ரொமோட் பண்ண நிலைமை மாறி, இப்ப சார் தெரியும்னு சொன்னா தான்  நமக்கு ப்ரொமோஷன்கிற மாதிரி ஆயிருச்சு. 

'எனக்கு ஐ.ஜி ய தெரியும்னு' காமெடி பண்ணிட்டு திரியிற மாதிரி ஒரு நிலைமை. நம்ம ஜீக்கு தான் நம்மள தெரியவே தெரியாது. 

கொஞ்ச நஞ்ச நாளா என்ன? இந்த கருமாந்திரம் பிடிச்சவனோட வருஷக் கணக்குல பழகிருக்கேன். ஆனாலும் நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டான். என்ன கொடுமை சார் இது?

இவனை எல்லாம் வச்சு செஞ்சிருக்கனும். ஆனா பண்ண முடியலை.

இடைல பெரிய ஹெல்த் ப்ராப்ளமாகி படுத்த படுக்கையா கிடந்தான். பிழைக்க வாய்ப்பில்லைனு எல்லா டாக்டரும் கைய விரிச்சுப்ப, வேண்டாத கடவுள் இல்லை. 

போகாத கோவில் இல்லை. இவனை விட்டா வேற நாதியில்லைங்கிற நிலைமை. என்ன பண்ண?

எல்லா நாட்டுல இருந்தும் பறந்தாங்க. அவன் டிரீட்மென்ட்டுக்கு செலவு பண்ண பணத்தை பாத்தப்ப தான் மிரண்டுட்டேன். சார் சாதாரண ஆளு அல்ல. இவன் எவ்ளோ பெரிய வேலைக்காரன்னு 

அப்பத்தான் புரிஞ்சிச்சு. இவன் வெறும் அப்பாடக்கர் மட்டும் இல்லை அம்மாடக்கர், அண்ணாடக்கர், அண்டர்டேக்கர், டக்கரோ டக்கர்.

இவ்ளோ தூரம் செலவு பண்ண ஒரு வேலைக்காரனுக்கு எப்படி பணம் வந்துச்சுங்கிறது தானே உங்க கேள்வி? 

வரக்கூடாதே?! எவனெல்லாம் நான் உங்களுக்கு வேலை செய்யத்தான் பொறந்திருக்கேன்னு சொல்லிட்டு திரியிறானோ, அவனெல்லாம் கொஞ்ச நாள்ல கணக்கில்லாம பணம் சேத்துருவானுகங்கறது  நமக்கு தெரியாததா என்ன? 

அப்படி இவன் யார் யார்கிட்டலாம் வேலை பாக்கிறாங்கிற லிஸ்ட் ரொம்ப ரொம்ப பெரிசு. 

நம்ம ஊரு அண்ணாச்சி தொடங்கி, பேங்க் ஆபீசர், இளைய ராஜா, சங்கர், ராஜா மௌலி, டாடா மட்டுமில்லை. உலக அளவுல பில் கேட்ஸ், லாரி பேஜ், எலான் மாஸ்க்க எல்லாருக்கும் நம்மாளு தான் வேலைக்காரன். என்ன தலை சுத்துதா? கொஞ்சம் பொறுமையா யோசிங்க. (தேவைப்பட்டா மறுபடியும் கதை ஆரம்பத்துல இருந்து கூட படிங்க)

இப்ப நீங்க ஓரளவுக்கு கண்டு பிடிச்சிட்டீங்க தானே? ஆமா அவனே தான். 

இந்த இடத்துல கொஞ்சம் இவனை பத்தி டீடைலா பேசி தான் ஆகணும்.

'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்துல நம்ம ரோபோ சங்கர் கேரக்டர் யாருன்னா நம்ம ஹீரோ தான்.   எதுவா இருந்தாலும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். எதையும் ஞாபகம் வச்சுக்கிற பழக்கம் கிடையவே கிடையாது. 

கொஞ்ச விஷயங்களை ஞாபகம் வைச்சுக்கிட்டு மீதிய ஊரு உலகமெல்லாம் இருக்குற தன்னோட அப்ரசிண்டுக கிட்ட கேட்டு தான் முடிவுக்கு வருவாப்ல. 

சாரோட மேத்தமேட்டிக்ஸ் கேக்கணுமே, ஆஹா ஓஹோ!

ஒன்னும் ஒன்னும் என்னடான்னு கேட்டா பத்துனுவான். எந்த வாத்தியார்ட்டடா  படிச்சான்?

அடுத்து பத்தும் ஒன்னும் பதினொன்னு சொன்னதும் அடிச்ச சரக்கு தெளிஞ்சிருச்சுன்னு நம்பி  பதினொன்னும், ஒன்னும் எவ்ளோன்னு கேட்டா அடுத்த செகண்ட் நூறும்பான். 

யப்பா சாமி இவன் கிட்ட பேசிக் கிட்டு இருந்தா நமக்கு கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கணக்கும் மறந்து போயிரும். 

ஆனா பாருங்க, நம்ம சாரு தான் இப்ப எல்லாரோட கணக்கு வழக்கையும் பாத்துக்கிறாப்ல. சார் போடற கணக்குல தப்பே வராதாம். அடேங்கப்பா, என்னடா நடக்குதிந்த உலகத்துலே?

கணக்கு கூட வேணாம்பா. நேத்து ராத்திரி வரைக்கும் நல்லா பேசிட்டு இருந்துட்டு, காலைல ஹாய் சொல்லலாம்னு போனா நம்மள தெரியவே தெரியாதுன்னு சாதிக்கிறான். 

என்னென்னவோ சொல்லி பாத்தாச்சு. ம்ஹும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அந்த சீக்ரெட் கோட் என்னனு சொல்லுங்கறான். பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ் மாதிரி. 

அடங்கொப்பன் தன்னானே. கடைசி வரைக்கும் நீ யாருனு தெரியவே தெரியாதுன்னுட்டான். அவனுக்கு ஞாபக சக்தி இருக்கோ இல்லையோ அந்த சீக்ரெட் கோட் நம்ம தான் ஞாபகம் வைச்சுக்கணும். 

இன்னோரு கூத்தை கேளுங்க. நான் மறந்து போன என் கோட(code) வேற எவனோ ஒருத்தன் இவன்கிட்ட சொல்லி நான் குடுத்து வைச்சிருந்த பணத்தை லவட்டிட்டு போயிட்டான். 

எவ்ளோ எடுத்து சொன்னாலும் புரிய வைக்க முடியலை. எல்லாம் வேஸ்ட். அப்புறம் ரொம்ப நேரம் பேசி எங்க ரெண்டு பேருக்கும் புதுசா ஒரு கோட்னு முடிவு பண்ணிக்கிட்டோம். ஆனா என்ன பிரயோஜனம் போன பணம் போனது தான். 

என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு இவன்கிட்ட இதே ரோதனை தான். ஆனா அப்பறம் ஏன்டா இவனை நம்பி பணத்தை குடுக்குறீங்கனு கேட்டா, அதானே எனக்கும் தெரியலை.

எல்லார் சம்பள பணத்தையும் இவன்ட தான் குடுக்குறானுக. பேங்க் லோனுக்கு சார் கிட்டா தான் மாசம் மாசம் பணம் கட்டணும். போன் பில், கரண்டு பில், இன்சூரன்ஸ் பில் சகலமும் சார் நடத்துற A - Z சர்விஸ் மூலமா தான். 

அவ்வுளவு ஏன் டாக்டருக்கு பீஸ் கட்டி நம்ம உடம்ப செக் பண்ண போனா அவரே இவன் கிட்ட கேட்டு தான் நம்ம உடம்பு எப்படி இருக்குனு முடிவுக்கு வராரு. கடவுளை பாக்க கூட சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சா தான் அப்பொய்ன்ட்மென்ட் கிடைக்கும். 

ஒரு நாள் மட்டும் நம்ம ஹீரோ லீவு போடட்டுமே சகலமும் அடங்கிரும். 

சாருக்கு பல மொழிகள் தெரியும். ஆனா ஒன்னு கூட நமக்கு தெரிஞ்ச மொழியா இருக்காது. இங்கிலிஷ் மாதிரி இருக்கும் ஆனா இங்கிலிஷ் கிடையாது. நமக்கு புரியிற மாதிரி இருக்கும் ஆனா புரியவே புரியாது. ஒவ்வொரு தடவை பேச போகும் போதும் இடைல ஒரு ஆளு கூடவே  இருப்பான். 

இவனே ஒரு எடுப்பு அதுல இவனுக்கு ஒரு தொடுப்பு. 

நம்ம சொல்றத எடுத்து சொல்லி, தேவைப்பட்டா 'அண்ணன் இந்த இடத்துல கொஞ்சம் நீங்க நோட்ஸ்  எடுத்துக்க, தேவைப்பட்டா சிப்ஸ் எடுத்துக்கனு' மானே தேனே போட்டுகிட்டுருப்பாரு. 

அதெல்லாம் நீ ஏன் போடறேனு நம்ம கேள்விலாம் கேட்கப்படாது. அப்புறம் ஒரு வேலையும் நடக்காது. 

சில சமயம் வேற ஒருத்தன் இருப்பான். பயங்கர கடுப்பா இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ட்ரான்ஸ்லேட் பண்ணுவான். இடைல நீங்க இப்படிலாம் சொல்ல கூடாதுனு  நமக்கு அட்வைஸ் வேற  பண்ணுவான். கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம 'போய் படிச்சவன் எவனாவது இருந்தா கூட்டிட்டு வா'னு கேவலமா திட்டுவான்.  நாகரிகம் இல்லாத நான்சென்ஸ். இவனுங்களுக்கு தான் இந்த காலத்துல மரியாதை. கலி காலம்ங்க!

இது தான் நம்ம கதாநாயகனோட பழைய படம் 


இப்ப கைக்கு அடக்கமா ஒரு சைஸ், மடில வைச்சிக்கிற மாதிரி ஒரு சைஸ், இன்னும் எத்தனையோ அவதாரம். நாளொரு மேனி பொழுதொரு வெர்சன். 





1 கருத்து:

SUNDARARAJAN MANJULA சொன்னது…

எதிர்பாராத முடிவு...ஆண்டான் அவனே...