திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தேரோட்டம்

வளையும் நெளியும் 

மொழியின் அழகில் 

மிதந்தேன்


நாவில் வசிக்கும்  

தேன் நீ


சுவாசம் தித்திக்கும் 

மணம் நீ 


பேசித் திரிந்தேன் 

கிறுக்கி மகிழ்ந்தேன் 


உனை 

சிந்தை இருத்தி 

செயலில் வடிக்க

கோவில் சிலையாய் 

தொடங்குதொரு

வெற்றித் தேரோட்டம்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

திகை, அடை,

இரு, 

உணர், எழு,

தகர், 

விழை, இணை, 

துளிர், உழை,

வளர்,

இணை, பகிர்,

திளை, தொலை,

பிடி.


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 


திகையோம்,

அடையோம்,

உணர்வுடன் 

இருப்போம்.


உணர்வோம்,

எழுவோம்,

தடை தனை 

தகர்ப்போம்.


விழைவோம்,

இணைவோம்,

இனியவை 

வளர்ப்போம்.


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 


தளரோம்,

துளிர்ப்போம்,

வளர்ந்திட  

உழைப்போம்.


இணைவோம்,

பகிர்வோம்,

விளைந்திட 

திளைப்போம்.


சிறுமையை 

தொலைப்போம் 

பெருமையை 

பிடிப்போம் 


ஓம், ஓம்,

ஓம், ஓம்,

ஓம், ஓம் 

ஓம், ஓம் 

வெள்ளி, 30 ஜூலை, 2021

நன்றி நட்பே


 நடந்த நாட்கள்,

வானம் பார்த்த 

கதைகள்,

காது நிறைத்த 

சிரிப்பொலிகள்,

இருட்டு கிழித்த 

தித்திப்புகள்,

புத்தாண்டின் 

புன்முறுவல் காட்டிய 

உன் நடனம்,

நெகிழ்ந்து நெகிழ்ந்து 

சுவாசித்த இசை,

எல்லா சந்தங்களிலும் 

ஒட்டிக்கொள்ளுமுன் 

பாடல் வரிகள்,

ஒவ்வொரு முறையும் 

உணருகிறேன் 

வாழ்க்கை எவ்வுளவு 

அழகானது -

உன்னால்!

திங்கள், 19 ஜூலை, 2021

நிறையுமென் அகராதி 

பகிருமுன்  ஒற்றை வார்த்தை 


உதிர்வதும் 

வசந்த காலம் 

உதிர்ப்பதுன் 

உதடென்றால்!

புதன், 23 ஜூன், 2021

மூச்சே

 தாயவள் குரலினில் 

இசையானதென் தமிழே!

தயையுடன் தலை கோதும் 

தந்தையவன் குறும் பேச்சே!


ஓதுமொரு உளியெடுத்து 

செதுக்குமொரு ஆசானே! 

செவி மடுத்துடன் வளர்ந்த 

தோழனது தேன் பேச்சே!


விழியுணர் வழியிலெங்கும் 

கண் நிறையும் கலை நீயே!

வடிவான தமிழே உனை 

வணங்கிடவே பேறு பெற்றேன்!  


திங்கள், 21 ஜூன், 2021

போற்றி உனக்கே!

எழுத்தாணி கொடுத்தே நீ 

ஏற்றிவிட்டாய் ஏணியிலே! 

பழுத்திட்ட பாசமூட்டி 

கொழுத்திடவே  வளர்த்ததும் நீ!


உழைப்பதுவே தொழுதலென 

உணர்ந்ததுவும் உன்னாலே!

களைப்பில்லா களிப்பொன்று

விழைத்திட்ட செயலோனே!! 


கந்தலாய்  கலங்கிய நாளில் 

தந்தையானாய் 

தெளிந்திட உயர்ந்திட நானும் 

பெருமிதமானாய்!

போற்றி உனக்கே!



ஞாயிறு, 28 மார்ச், 2021

பற

சிறகிருக்க பறவை 

மிதக்குதது வானில் 
உறவெனவே உடனே  
பறக்குமென் நட்பு

விரிந்திருக்கும் மண்ணில் 
எல்லைகள் இல்லை 

காற்றிருக்கும் தூரம் 
போதவில்லை பயணம் 

மனம் விரிக்கும் வெளியில் 
தடைகளெதுவும் இல்லை 
விரிந்திருக்கும் மனதில் 
நெருங்குமோ கவலை 

தூக்கி திரிவதில்லை
சேர்ப்பதில்லை உணவை

உண்டவுடன் செரிக்கும்
கிடைத்த இடம் இனிக்கும்

பறக்க வா நண்பா 
சிறப்பினை உணரு!