புதன், 14 அக்டோபர், 2020

விழியினில் பிறந்ததோர் 

ஒளியென நிறைகிறாய்

வழிகளில் வசந்தங்கள் 

தெளித்திட்ட பாதை நீ.


மொழியொரு  இசையென 

உணர்ந்ததும் உன்னாலே!

திகட்டாத அமுதென 

சுவைகளும் உன்னாலே!


கடவுளும் உடன் வர 

கடந்திடும் நிமிடமே - என்  

கனவுகள் மெய் பட 

கைப்பிடித்தாயடி!!


தினம் தினம் 

நிறைகிற இன்பமே நீ 

பிறந்த தினமின்று - எம் 

சிறந்த தினமடி!!


Happy Birthday Subha!! 


வெள்ளி, 2 அக்டோபர், 2020

கதை கதையாம் காரணமாம்

நானும் ரவுடி தான் தெரியுமான்னு கிளம்பியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் நண்பன் தயவுல மறுபடி பேனா. இன்னுமாடா நம்மள இந்த உலகம் நம்புது!!????

நானெல்லாம் கதை எழுத ஆரம்பிச்ச கதையே ஒரு பெரிய கதை. சிறுவர் மலர் பட கதைல ஆரம்பிச்சேன். அம்புலி மாமா, காமிக்ஸ் கதைகள், ராஜேஷ் கண்ணா, சுபா, சுஜாதா, மதன், உதயமூர்த்தி, பாலகுமாரன், வைரமுத்துன்னு இப்படி இன்னும் நீளமான பட்டியல்ல அத்தனை பேரையும் நீங்க திட்டிக்கலாம். 

எவ்ளவோ தாங்கிட்டீங்க இதை படிக்க மாட்டிங்களா என்ன?

நல்ல ஞாபகம் இருக்கு அந்த முதல் கதை வெளியான நாள். லியோனியோட பட்டி மன்றங்கள்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சு பாதி ஊரு வியாதி இல்லாம இருந்த நாட்கள். 

சமயத்துல பள்ளி நிகழ்ச்சிகள்ல கலந்துகிற ஞான சம்பந்தம் ஐயா. அடடா, இன்னைக்கும் வரைக்கும் ரொம்ப சாதாரணமா சிரிப்பையும் சிந்தனையும் கலந்து கலை காட்டும் அவரோட பேச்சுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ சாம்ராஜ்யங்கள் அடிமை. 

பட்டுகோட்டை, கண்ணதாசன் பாட்டை பட்டிமன்றத்துல கேக்குற சுகம் இருக்கே. இன்னமும் நினைத்தாலே இனிக்கும் இரவுகள். 

எங்க வாத்தியார் மாரிமுத்து சாரும் அதுல ஒரு அங்கம். அவரோட பேச்சை கேட்டு பாடம் படிச்சவன். நம்மல்லாம் கதையோ கவிதையோ எழுதாம இருந்தா தான் தப்பு. 

அப்படித் தான் ஒரு நாள் ஒரு சின்ன காகிதத்துல கிறிக்கிட்டு திரும்ப திரும்ப படிக்கிறேன். பத்து நாள் கழிச்சு மறுபடி எடுத்து படிக்கிறேன். அட நம்மளும் எழுதுறோம்டா.  

கொஞ்சம் தைரியம், நிறைய தயக்கம். எங்க ஊருல ரொம்ப வெற்றிகரமா தொடங்கப் பட்ட சிவா இதழுக்கு அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சிட்டு ஒதுக்கிட்டாலும் சரி. பதிச்சிட்டாலும் சரி. 

ஆனா நம்ம பேர் போட்டா ஒதுக்கிடுவாங்களோனு மறுபடி யோசனை. அப்ப நம்ம பேர் வேணாம். சுஜாதா ரேஞ்சுக்கு ஒரு பேர்னு முடிவாச்சு. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தைனு ஒரு நாள் பூரா போராடி நாலஞ்சு பேர்  தயார். முன்னால ஊர் பேரை சேத்துக்கிட்டா அடடே பிரமாதம்.  தயார் பண்ண பேர்ல ஒண்ண சீட்டு போட்டு எடுத்து சாமிகிட்ட வேண்டிக்கிட்டு கதை அனுப்பி வைச்சேன்.

கதை எழுதுன நேரம் கம்மி தான். கதையாசிரியர் பேருக்கு  தான்  ரொம்ப நேரம் எடுத்தாச்சு. 

ஒரு சிறப்பான நாள்ல, கதைய  புத்தகத்துல பாக்குறேன். இன்னமும் அந்த இதழோட மணம் மனசுல நிக்குது. திரும்ப திரும்ப புரட்டுறேன்.  நம்ப முடியாம நடக்கிறேன். திரும்ப திரும்ப நம்ம கதை தானான்னு நம்ப முடியாம பாக்குறேன்.

பட்டாம் பூச்சி ஒண்ணு காதலியை பாக்காமலே பறக்க ஆரம்பிக்குது. சைக்கிளை எடுத்துட்டு ஊரெல்லாம் சுத்துறேன். 

சொல்ல முடியாத சந்தோஷம். அப்படி தான் சொல்லணும். யாருகிட்ட போயி சொல்ல முடியும்? 

என்ன கொடுமை சார் இது? எவன் நம்புவான் சொல்லுங்க. நான் தான் அனுப்புனேங்கறது ஏதாவது ப்ரூப் இருக்கா?? 

வீட்டுல சொன்னா யாருடா அந்த பிள்ளைன்னு டின் கட்டிருவாங்க. நானே படிச்சு டயர்டாகி மறுபடி படிச்சு தெளிய தெளிய தொடருறேன். எனக்கு நானே ரசிகனாகிகிட்டேன். நீயெல்லாம் நல்ல வருவாடானு எனக்கு நானே பல முறை சொல்லிக்கிட்டேன். அடுத்தும் கிறுக்க ஆரம்பிச்சேன். அதோட விளைவு தான் இப்படி இன்னொரு கதை. 

வேற ஒரு பேர்ல எழுதறதுக்கெல்லாம் ரொம்ப சரக்கும் கொஞ்சம் தைரியமும் வேணும். இது தான் இந்த கைப்புள்ள கதை எழுத ஆரம்பிச்ச கதை. 

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

முடியாத தொடக்கம்

 சுவாரஸ்யமாய் நகருகிற கதையின் கடைசி பக்கங்களிலிருந்து பிரிக்கவே முடியாத பதை பதைப்போடு புரட்டுகிறேன். கடிகார முள் கூட கவனம் திருப்பும் இரவு. காதடைத்த பேரமைதியோடு வழுக்கி ஓடுகிறது நேரம். 

கதையின் நாயகன் கதை மட்டுமே என்பதை புரிந்து கொண்ட எழுத்தாளர். மேலெதுவும் பூசாமல் இயல்பாகவே நகர்கிற கதையின் முடிவில் அந்த வேட்டை நாய் சீண்டுவாரற்று அலைகிறது. வாய் கட்டி வயிறு கட்டி சேர்த்த பணத்தை தலைமுறைக்கென எழுதிவிட்டு மாத்திரை மென்று நகர்த்துகிறான் நாட்களை அவன். 

என்ன கதையிது??? விறு விறுப்பான கதையின் முடிவு ஏன் இவ்வளுவு விரக்தியாய் என்று பிதுங்கும் கேள்விகளோடு படுக்கைக்கு நகர்கிறேன். மறுபடி மறுபடி அசை போடுவதற்கு அந்த முடிவே காரணமாயிருக்கலாம். 

பிரண்டு படுத்து முடிவிலிருந்து பின் நோக்கி நகர்கிற போது தான் கதை கொஞ்சம் தெளிவது உணர்ந்து அயர்ந்து தூங்க ஆரம்பிக்கிறேன். 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

தேடல்

நகர்ந்திடா நாட்களை
விழி போக்கில்
விட்டு விட்டே
உறைந்திட்ட பனியென
ஒதுங்கினேன் சாய்ந்திட்டே!

பெருமுள்ளும் சிறுமுள்ளும்
எனை சாய்த்து
வெற்றி கொள்ள
நேரம் கடத்தியதாய்
விவரமில்லதொரு 
வெற்(று)றி  புன்னகை!

தொலையியக்கி கைமாற
உணருகிறேன்

யாரியக்க இப்படி நான்
எனை தொலைக்க
இயங்குகிறேன்

எனை இயக்கும்
உந்து கோளை
தேட வேண்டும் 
நகருகிறேன்

இயல்பது இயல்வதே! 
இருப்பதை உரைதீட்ட  
உருவென ஏறட்டும் 
தொடர்கிறேன் 

சனி, 1 ஆகஸ்ட், 2020

Happy Friendship day

நட்பே உந்தன்
நினைவை பிடித்தே
நாட்கள் நடக்கிறதே

நினைத்தால் இனிக்கும்
தருணம் எல்லாம்
உன் முகம்
மிளிர்கிறதே

நேற்று எந்தன்
கதைக்கு எல்லாம்
செவியாய் இருந்ததும் நீ

இன்றோ பகிரும்
பிரிதொரு கதையில்
நீயே நிறைகின்றாய்

சிரிக்கும் உந்தன்
முகத்தில் நிறையும்
ஒளியில் திளைத்திருந்தோம்

உன்னுடன் கரையும்
திகட்டா நாட்களை
நீட்டிக்க கேட்டிருந்தோம்

தூரம் கடந்து
நிற்கும் போதும்
மேலும் ஒளிர்கின்றாய்

புரட்டும் 
ஞாபக செருகேட்டில்
பளிச்சென சிரிக்கிறாய் 

நாட்கள்
புதிய பூவென
வாசம் நிறைந்ததும்
உன்னாலே

பழைய பூக்கள்
மறுபடி மறுபடி
மலரும் மகத்துவம்
நிகழ்வதும்  உன்னாலே

கடந்திடும் தூரம்
களைப்பினை விரட்டிடும்
நட்பது வரமன்றோ?! - உன்
நட்பினை அடைந்ததால்
கூடுதே  தினம் தினம்
வாழ்வில்  சுவையன்றோ?!


(tried this for the tune செல்ல கிளிகளாம் பள்ளியிலே... song)

இந்த கவலை
பறந்தோடும்
ஏற்றம் நாளை 
கை கூடும்

இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
புது விடியலிலே
இன்பம் கோடி வரும்

கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா

பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா

கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா

பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா

ஊக்கம் மருந்தாய்
ஏற்றிக் கொண்டோம்
கலக்கம் இல்லை
எங்கள் நெஞ்சில்

தளரும் நெஞ்சில்
படரும் கொடி தான்
நோய்கள் நொடிகள்
உண்மை நண்பா

இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்

எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்

இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்

நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து  நின்றார்
முன்னோரெல்லாம்

நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்

நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து நின்றார்
முன்னோரெல்லாம்

நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்

பொன்னும் பொருளும்
செல்வம் இல்லை
உடலின் வலிமை
வேண்டும் நண்பா

இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும்

எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்

இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும் 

திங்கள், 27 ஜூலை, 2020

பார்வை 1
------------

நட்டு வைச்ச விதை
வள(ர்)ந்து வந்த
நாள் இன்னும் மறக்க(லை)ல

எட்டு வைச்சு பாக்காம
எட்ட நின்னு பாத்திருந்தேன்

தெரியாம கால் பாட்டு
எதுனாச்சும் ஆச்சுதுன்னா!?
நினைக்கவே பதறுது.
பாத்தி கட்டி நனைச்சிருந்தேன்.

எப்ப வரும் துளிர்னு - கண்
கொட்ட கொட்ட காத்திருந்தேன்.
எட்டிப் பாத்த சேதி சொல்லி
எட்டு காதை பேத்துருக்கேன்.

மண் மாத்தி, உரம் போட்டு
களையெல்லாம் எடுத்து விட்டு
கலையாம பாத்துக்கிட்டேன்.
மழை வந்து காத்தடிச்சா
ஒடியாம வேண்டிகிட்டேன்.

செடியாச்சு, மரமாச்சு
இலைக்கு கீழே நிழலாச்சு
காக்கா குருவிக்கும்
வீடொன்னு உருவாச்சு.

மொட்டு விட்ட நாள் கண்ணு
சொட்டு சொட்டா சொட்டு விட
கண்ணீரு வடிச்சிருக்கேன்.
மண்ணோடா மவுசுன்னு
மலைச்சுட்டே தூங்கி(யி)ருக்கேன்

பூவிட்டு காய் விட்டு
கொத்து கொத்தா காச்சிருக்க
கண்ணெல்லாம் செவப்பாச்சு
மண்டை மூளை வெடிச்சிருச்சு

பாவி மரம்.

வேலி தாண்டிருச்சே!
வேண்டாத வீட்டு மேல
நிழலோட பூவும்  விட்டு
எட்டுற உயரத்துல
எம்புட்டு வளந்திருக்கு
எதுக்கு இப்படி நீண்டிருக்கு?

வைச்சது நானு
வள(ர்)த்ததும் நானு
காய்க்கிற கனத்தால
வளைஞ்சு போயிருச்சே.
விளைஞ்ச காய் பறிக்க
எட்டுற  தூரத்துல
பிறர் வலைச்ச கதையாச்சே.

மர மண்டைனு
வாத்தியார் குட்டினப்பா
வலிச்சதில்லை
வலிக்குதிப்ப நீ
கொழிக்கிற நேரத்துல




பார்வை 2
------------
ஊரெல்லாம் ஒடுங்கிருக்கு
உறவெல்லாம் ஒதுங்கியிருக்கு
பெருக்கிட்ட வாசலிலே
கால்தடம் பதிய(வி)ல்(லை)ல
என்னதான் நடக்குதுன்னு
எவனுக்கும் புரிபடல

முறுக்குன மீசையெல்லாம்  
பாத்திரம் கழுவுறானாம்
கழுவுனா பாத்திரத்தை
மறுபடி கழுவுறானாம்

படிச்சவன், சேத்தவன்,
விவரம் தெரிஞ்சவன்
எல்லாரும் மக்கானான்.
பூட்டுன வீட்டுக்குள்ள
பேசி பேசி மாஞ்சு போறான்.

கவருமெண்டு கதையெல்லாம்
நம்பி ஒண்டிக்கிட்டேன்
நல்லது நடக்குமுன்னு
நம்பி தான் காத்திருக்கேன்

எல்லாம் வீணாச்சு
வாய்க்கும் வயித்துக்கும்
என்ன சொல்லி நாள் நகத்த?
வாய்க்கரிசி போட கூட
வழியில்லா பொழைப்பாச்சே

பக்கத்து வீட்டு மகராசன்
முகம் கொடுத்து நாளாச்சு.
எவனெவனோ தலைவன்னு
எப்பவோ நடந்தந்த
வெட்டி பேச்சு நீண்டு
பெரும் பகையா ஆயிடுச்சு
வேண்டாத ஆளாச்சு.

அவன் வீட்டு மரத்து இலை
என் வீடு குப்பையாச்சு
காக்கா குருவின்னு
கக்கா போயி போயி
பக்கவாடு பாழாச்சு

வெட்டி தூக்கி போட
அரிவாளு தூக்குனாலும்
மனசு ஒத்துவல்(லை)ல

மாரிமுத்து வாத்தியாரு
வளக்க பழக்குன கையிது
ஒரு போதும் தவறாது.
அரிவாளு தூக்கி போட்டு
அறிவோட அடங்கிட்டேன்.