புதன், 18 ஆகஸ்ட், 2021

ராஜாங்கம்

குறுகலான வளைந்து நெளிந்த அந்த பாதையின் முடிவில் உடலை குறுக்கி தான்  வெளி வர முடியும். அந்த பகுதியில் வாழ்கிற நூர் அக்கா குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  நல்ல உழைப்பாளிகள். காலையில்  குழாயடி சண்டை தொடங்கி ஒவ்வொரு தினசரி நடப்புகளிலும் பலமுறை கண்ணில் படுவார்கள். என் கடந்த கால மன ஓவியம் பலவற்றில் அவர்களை பார்க்க முடியும்.

தாத்தா ஒவ்வொரு நாளும் அவர்கள் வீட்டு  வழியே தான் கடைக்கு போவார். தாத்தாவின் நல விசாரிப்பும் பெரிய புன்னகையும் பரிட்சயம். எண்பது வயது தாண்டிய பின்னாலும் தாத்தா வசம் கம்பீரம் என்றும் குறைந்ததில்லை. 

ரஜினி, கமல் கால கட்டத்திலேயே அவங்க எல்லாரையும் விட பெரிய ஹீரோ எனக்கு எங்க தாத்தா. என்னை வளர்த்த தாத்தா.

பெயருக்கு பின்னலான சாதி பெயரை நீக்கி விட்டால் 'ராஜாங்கம்'. பெயருக்கு ஏற்ற கம்பீரம். தாத்தாவை எதற்கேனும் எப்போதேனும் தயங்கி பார்த்ததில்லை. நல்ல பிள்ளைகளை பெற்ற சந்தோசம்  காரணமாயிருக்கலாம். 

அவரை விட வாழ்க்கை பற்றிய மிகத் தெளிவான பார்வை கொண்ட எவரையும் இன்றளவும் கடந்து வந்ததில்லை.

'ஹீரோ இன்ட்ரோலேயே நேரம் கடத்தாம நேரா கதைக்கு வா'ங்கிற உங்க டென்ஷன் தெரியுது. ஆனா பாஸ்,  இங்க கதையே அவர் தான்.

தாத்தாவை பத்தி கதை எழுதணும்ங்கிறது நீண்ட நாள் கனவெல்லாம் இல்லை. ஆனா ஒவ்வொரு நாளும் மனம் அசை போடுற பெருங்காவியம். 

எங்க வீட்ல சிரிக்கிற தாத்தா படம், நாடு கடந்து வந்ததுக்கப்புறமும் இன்னும் அப்படியே நெஞ்சுக்குள்ளாயே இருக்கு. முன்னை விட இப்ப இன்னும் அதிகமாகுற தாத்தா மேலான மரியாதைக்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள்ல கூட அவர்ட பார்த்த சிறப்பான அணுகுமுறை. அதோட பாசத்துக்கு 200% மார்க்  வாங்குன எங்க அப்பத்தா.

ஊருக்கு முக்கியமான பகுதியில் பலசரக்கடை. பிளாஸ்டிக் வயரால் பின்னப்பட்ட சின்ன பலகை.  அவரது ஆசனம். சில முறை நானும் அதில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். மிக அசௌர்யமாக தோன்றும் அதே இருக்கையில் தாத்தா உட்கார்ந்திருக்கும் போது பாக்கவே சும்மா ஜம்முனு இருக்கும்.

கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் புன்னகையோடான அவரது உரையாடல் கடந்து போகிறவர்களை கூட கடைக்கு இழுக்கும்.கடைக்கு வருபவர்களுக்கு  கல்கண்டு, பேரிச்சம் பழம் என்று குழந்தை பெரியவர்கள் என்று ஆளுக்கேற்றவாறு கிடைக்கும்.  

தாத்தா சிரிப்புக்கும் பேச்சுக்கும் முன்னாடி கற்கண்டு எல்லாம் பெரிய விஷயமா என்ன? அந்த புன்னகையின் ஈர்ப்பு இன்னும் உயிர்ப்பில் இருக்கிறது - எங்கள் வீட்டில் எல்லோரது நினைவு சில்லுகளிலும்  அவரது புகைப்படத்திலும்.

சித்தப்பாக்கள் இரண்டு பேரும் தாத்தாவிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல. நான் தாத்தாவுடன் கொஞ்சம் அதிகம் செலவிட்டுருக்கலாம்.  பழைய ஞாபகம் சிறகடிக்கிற நேரங்களில் வருத்தம் வந்து போகும். 

தாத்தா முகஞ்சுருக்கி பார்த்ததில்லையென்றாலும் ஒரே  அதட்டலில்  சர்வ நாடியும் அடக்கி விடுவார். பேச்சுக்கு எதிர் பேச்சு வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு முறை எதையோ கேட்கப் போய் 'போடா வீட்டுக்கு' என்ற ஒற்றை வார்த்தையில் டமால் ஆனாது நினைவிருக்கிறது. ஆனா எதுக்குன்னு தான் என்ன யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது.

மற்றவர்களின் அபிப்ராயம் தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை அவரது பேச்சும் நடவடிக்கைகளும் துல்லியமாக இருக்கும். அவர்ட  குடுக்குற கணக்கும் அதே மாதிரி துல்லியமா இருக்கணும். தியேட்டர்க்கு போனா எந்த டிக்கெட் எடுக்கணும், என்ன இண்டெர்வல்ல சாப்பிடணும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்பணுங்கிற வரைக்கும் எல்லா டீடைலும் அவர்ட குடுக்கணும். முக்கியமா அதே மாதிரி நடக்கணும்.

ஒரு குடும்பம் இல்லை. சித்தப்பா குடும்பம், மாமா குடும்பம் எல்லாம் சேத்து அஞ்சு குடும்பத்தை கண்ட்ரோல்ல வைச்சிகிறது எவ்வுளவு பெரிய விஷயம். அதோட வெளியூர்ல இருக்குற சொந்தங்களோட நல்ல பழக்கத்துல இருந்தோம். 

இன்னைக்கு ஒவ்வொன்னுக்கும் பெரிய மீட்டிங், பட்ஜெட்டுனு நகருற நாலு மெம்பர் குடும்பத்துக்கே நமக்கெல்லாம் நாக்கு தள்ளுது.

அக்காவிற்கு கல்யாணம் ஆன புதிதில் ஒவ்வொரு முறை அத்தான் வீட்டுக்கு வரும் போதும் தாத்தா வீட்டில் தான் விருந்து. சித்தப்பா, சித்தி, மாமா குடும்பம் எல்லோரும் ஒரே வீட்டில் குடியிருக்கிற தருணம். பெரிய குதூகலம்.

அம்மா, சித்தி, அத்தை எல்லோரும் சேர்ந்து சமைக்கிற விருந்துக்கு இன்றும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிற நாக்கு. 

மாலை நேரங்களில் எல்லா பொடிசுகளும் வீட்டு வாசலில் விளையாட்டு . கோ கோ விளையாடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. விளையாட்டு முடிந்து வந்தால்  உட்கார வைத்து பெரிய சட்டியில் கூட்டாஞ்சோறு ஊட்டி விடுகிற அம்மா.

அப்போது அம்மா சொல்கிற கதையில் மூணு மடங்கு சாப்பாடு உள்ளே இறங்கும். எவ்வுளவு சாப்பிட்டாலும் கடைசியில் போட்டி இழுத்து விடும்  சின்னூண்டு நொய் சாத ருசி எல்லாவற்றிற்கும் மேல். 

இன்னைக்கு எனக்கு கதை எழுதுற ஆர்வம் வர்றதுக்கு அம்மா தான் முக்கிய காரணமாயிருக்க வேண்டும். ஒரே கதையே நூறு தடவை சொன்னாலும் ஒவ்வொரு தடவையும் திரும்ப திரும்ப கேக்குற மாதிரி இருக்கும். அது தான் எப்படினு தெரியலை.

இரவு சாதம் முடித்து கலை கட்டும் மீட்டிங்கில் தாத்தா தான் பிரதானம். ராஜா காலத்து தர்பாரேல்லாம் இப்படித் தானிருந்திருக்க வேண்டும். அப்பாவும் சித்தப்பாக்களும்  இந்த மாதிரி  நிகழ்வுகளை ரொம்பவே விரும்புபவர்கள். எல்லாம் பேசி முடித்து வீட்டுக்கு கிளம்புகையில் இரவு மணி ஒன்றுக்கும் மேலாகி விடும்.

பெரும்பாலும் மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாய் தானிருக்கும் என்பதால் தூக்கத்துக்கு ஒன்னும் குறைவில்லை. மறுநாள் காலை சுட சுட ஹோட்டல் இட்லி, பேப்பர் ரோஸ்ட், சாம்பார் வடையோட கம கமன்னு விடியும். ஒரே ஜீவன் அப்பா மட்டும் கடைக்கு எட்டு மணிக்கு முன்பாகவே கடைக்கு கிளம்பி போயிருப்பார்.

-- தாத்தா கை பிடித்து நாளை 

கருத்துகள் இல்லை: