செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இசை வெளி

ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது.

மழலையின் பாலும்
விளையாடும்
மெல்லிசையே - நீ
ஆண் பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரியாது!

நாசி வழி
உள் நுழைந்து 
நரம்பெல்லாம் நடமாடும்
காற்று உனை
பிறந்திட்ட கணம் தொட்டே
பிடித்திட்டேன்.

வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்
விஞ்ஞானம் சொல்லிக்கொடுத்தது!

பிடில் வழி,
யாழ் வழி,
குழல் வழி,
இனிக்கும் குரல் வழி
நடனமாடும் காற்றே!

நீ இல்லா 
வெற்று வெளிகளில்
எப்பொருளும்
கனப்பதில்லையாம்!

செவி வழி உன்னை
சுவாசிக்கிற தருணங்களில்
வாழ்வின் இனிமை
எடை ஏறி போக - புரிகிறது
நீயின்றி எப்படி எடையேறும்
பொருட்கள்?

புவியீர்ப்பு விசைக்கே
நீயன்றோ  விசை!

ஆண்பாலா? பெண் பாலா?
ஆண்டவன் பாலா?
தெரிய வேண்டாம்
உன் பால் சரணடைந்தே
இனிக்கிறது 
மூச்சு விடும் நொடியெல்லாம்!

கருத்துகள் இல்லை: